ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஆற்றில் இருந்து மணல் அள்ளும்போது, மணலுக்குள் புதைந்து கிடந்த பல நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டம் செஜர்லா மண்டல் பகுதிக்கு அருகே பெரமல்லாபாடு என்ற கிராமத்தில் பெண்ணா நதியில் ஒரு குழு மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அங்கு ஒரு கட்டட அமைப்பு தென்படுவதைப் பார்த்த குழுவினர், உடனடியாக அதைச் சுற்றியிருந்த மண்ணை அகற்றியபோது கோயில் ஒன்று இருப்பதை அறிந்தனர்.
உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது, அது பெண்ணா ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட 101 கோயில்களில் ஒன்று என்றும், பரசுராமர் கோயில் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். சிலர் அது நாகேஸ்வர கோயில் என்றும், இரு நூறு ஆண்டுகள் பழமையானது என்றும் கூறுகிறார்கள்.
மணலை அப்புறப்படுத்தி, கோயிலை வெளியே கொண்டு வரும் நடவடிக்கையில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.