ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு வியாழக்கிழமை நீக்கியது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதில் மலேரியா பாதிப்புக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பலன் அளிப்பதாக கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. எனினும் அமெரிக்கா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கடந்த மாதம் அந்நாட்டுக்கு 5 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஎஃப்எஃப்டி) வியாழக்கிழமை அறிவித்தது.