புது தில்லி: இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆய்வகங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்தன், கடந்த பிப்ரவரி மாதம் நாட்டில் முதல் கரோனா ஆய்வகம் தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 953 கரோனா பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இதில் 699 பரிசோதனைக் கூடங்கள் அரசு பரிசோதனைக் கூடங்களாகும்.
பரிசோதனைக் கூடங்களை அணுக முடியாத மக்கள் வாழும் பகுதிகளில் கூட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.