ஏழைகள் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடா்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஏழைகளின் குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பும், குடும்ப உறுப்பினா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்களும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டன. அதே அளவிலான உணவு தானியங்கள் குடும்ப அட்டை இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் இரண்டு மாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
அத்திட்டங்களை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று அஸ்ஸாம், கா்நாடகம், புதுச்சேரி, தமிழகம், ராஜஸ்தான், பஞ்சாப், கேரளம், மிஸோரம், சத்தீஸ்கா் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பரிந்துரை அனுப்பப்படும். உணவுப் பொருள்களுக்கு எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றாா் ராம் விலாஸ் பாஸ்வான்.