புது தில்லி: கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதல், திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தற்போது தெளிவாகிறது, ஆனால், மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததற்கான விலையாக இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய - சீன எல்லையில் தற்போது உருவாகியிருக்கும் சூழ்நிலை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. ஆணிகளுடன் இரும்புக் கம்பிகள்: இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கப் பயன்படுத்தப்பட்டதா?
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் ராணுவ உயர் அதிகாரி மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். 76 இந்திய வீரர்கள் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்.. ராணுவ மேஜர்கள் உள்பட இந்திய வீரர்கள் 10 பேரை விடுவித்தது சீனா
இந்த நிலையில், ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, தற்போது இது தெள்ளத் தெளிவாக தெரிகிறது, சீன ராணுவத்தின் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளது, பிரச்னையை மறுத்து வந்தது. அதற்கான விலையாக இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை அளித்துள்ளனர் என்று சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.