ஜம்மு-காஷ்மீரில் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளும், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐ.ஜி விஜய் குமார் கூறுகையில், 'புல்வாமாவில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
ஷோபியன் மாவட்டத்தின் பந்த்பாவா கிராமத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில், வெள்ளிக்கிழமை நான்கு பயங்கரவாதிகள் மற்றும் வியாழக்கிழமை ஒருவர் என ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அவர்கள், ஜெய்ஷ் -இ- முகம்மது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்.
உள்ளூர் போலீஸார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை' என்று தெரிவித்தார்.