பெங்களூரு: ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கர்நாடக முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.
இதுதொடர்பாக பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீட்டில் செயல்படும் முதல்வர் அலுவலக மேற்பார்வை பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் செய்தி நிருவனத்திடம் கூறியதாவது:
இங்கு பணியாற்றிய பெண் ஊழியரின் கணவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வரின் வீட்டு அலுவலகம் கிருமிநாசினி தெளிப்பிற்காக மூடப்பட்டது.
கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவுடன் அந்த ஊழியர் இரு நாட்களாக அலுவலகம் வரவில்லை.
அத்துடன் அவரது பணியானது வெளியே உள்ள அவுட் போஸ்டில் மட்டும்தான் என்பதால், அவர் உள்ளே முதல்வரையோ அல்லது அவரைச் சந்திக்க வரும் அமைச்சர்களுடனோ தொடர்பு கொள்ள வழியில்லை.
இங்கு திட்டமிட்டிருந்த போலீஸ் அதிகாரிகளின் சந்திப்பு உட்பட முதல்வரின் பணிகள் யாவும், தற்போது மாநில சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதா வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.