கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாதுகாப்பு உடையுடன் வந்து மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்று காலியிடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் சவுத்ரி பாதுகாப்பு உடையுடன் வந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் பாதுகாப்பு உடையுடன் சட்டமன்றத்துக்கு வருகை வந்து தேர்தலில் வாக்களித்துச் சென்றார். அவர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய பின்னர், சட்டமன்ற வளாகத்தை ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.