மாநிலங்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்றது.
அந்தந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்து வந்தும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் மத்தியப் பிரதேசயத்தில் பாஜகவும், ராஜஸ்தானில் காங்கிரஸும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சுமேர் சிங் சோலங்கி ஆகியோர் பாஜக சார்பிலும், திக் விஜய சிங் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால், நிரஜ் டாங்கி ஆகியோரும், பாஜகவின் ராஜேந்திர கெலாட்டும் வெற்றி பெற்று மாநிலங்களவைக்கு செல்கின்றனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆகிய மாநிலங்களில் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.