லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை ரஷியா செல்லவுள்ள நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சமாளிக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன. எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்றதன் 75 ஆம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24ல் மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள்கள் அரசுப் பயணமாக நாளை மாஸ்கோ புறப்படுகிறார்.