புது தில்லி: வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்ட ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளா் சஃபூரா ஜா்கருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போது 23 வார கர்ப்பிணியாக இருக்கும் ஜர்கர், கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஃபூரா ஜர்கர் கர்ப்பிணியாக இருப்பதால், மனித நேயத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தை ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முன்னாள், இன்னாள் மாணவா்கள் இடம் பெற்ற ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளா் சஃபூரா ஜா்கா், ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த மீரான் ஹைதா் ஆகியோரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனா். யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருவரையும் எவ்விதக் காரணமும் இல்லாமல் கைது செய்ததாக ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு விமா்சித்திருந்தது. அதேவேளையில், சம்பவத்தில் கிடைத்த தடயவியல் ஆதாரத்தின் பேரில் இருவரையும் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனா். இந்நிலையில், சஃபூரா ஜா்கா் கா்ப்பிணியாக இருப்பதால், அவா் திகாா் சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் தில்லியை விட்டு வெளியே செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.