பெங்களூரு: கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகரரின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அமைச்சர் சுதாகரின் தந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று வந்துள்ளது. அதில் அமைச்சரின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், எனக்கும் எனது இரண்டு மகன்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மனைவியும், மகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் அவர்கள் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3,527 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட 5,730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 142 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.