பிரதமர் நல நிதியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரதமர் நல நிதி செலவின விவரங்களை பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிரதமர் நல நிதியில் இருந்து ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று, நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், பிகார், குஜராத், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதாவது, 50% நிதி, மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையிலும், 40% நிதி, மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரங்கள் அடிப்படையிலும், 10% நிதி அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சை, சொந்த ஊர் பயணச் செலவுகளுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது. இதில், தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரம் - ரூ.181 கோடி, உத்தரப் பிரதேசம் - ரூ.103 கோடி, குஜராத் - ரூ.66 கோடி, தில்லி -ரூ.55 கோடி, மேற்கு வங்கம் - ரூ.53 கோடி, பிகார் - ரூ.51 கோடி, மத்தியப் பிரதேசம் - ரூ.50 கோடி, ராஜஸ்தான் - ரூ.50 கோடி, கர்நாடகம் - ரூ.34 கோடி என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.