பொதுமுடக்கத்தால் வேலை இழந்த தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் பள்ளி முதல்வர் தற்போது இட்லி, தோசை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொதுமுடக்கத்தினால் அனைத்துத் துறைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. பல நிறுவனங்களில் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்த ஒருவர், பொதுமுடக்கத்தால் தனது வேலையை இழந்த நிலையில், தற்போது நடமாடும் வண்டியில் இட்லி, தோசை விற்பனை செய்து வருகிறார்.
36 வயதான மரகனி ராம்பாபு தனது மனைவியுடன் இணைந்து தினமும் காலை உணவைத் தயாரித்து விற்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'பொதுமுடக்கம் முடிந்து பள்ளி திறக்கும் வரை பள்ளி முதல்வர் பதவிக்கு ஆள் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் பொதுமுடக்க காலத்தில் எனக்கு வருமானம் இல்லை. வேறு வருமானம் இல்லாதததால் இந்த முடிவுக்கு வந்தோம். தற்போதைய சூழ்நிலையில் காலை உணவுக்கு இட்லி, தோசை, வடை விற்கிறோம்.
இந்த பொதுமுடக்க காலத்தில் என்னைப் போன்று பலர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த நெருக்கடி நேரத்தில் அரசு உதவி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.