கூட்டத்தின் கண்முன்னே விநோத விபத்தில் சிக்கி உயிரிழந்த யானைக்குட்டி!
கொல்கத்தா: தனது கூட்டத்தின் கண்முன்னே எதிர்பாரா விபத்தில் சிக்கி யானைக்குட்டி ஒன்று உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக மாநில வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாவது:
மேற்கு வங்கத்தின் அலி புர்துவார் மாவட்டத்தில் ஜல்தபரா தேசிய வனப்பூங்கா அமைந்துள்ளது. சம்பவத்தன்று இந்த வனத்தின் வடக்குப் பகுதியில் இருந்து யானைக் கூட்டம் ஒன்று, கிழக்கு மதரிஹர் பகுதியில் உள்ள பாக்குத் தோட்டம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
அப்போது அங்கிருந்த மரக்கிளையொன்று எதிர்பாராவிதமாக சாய்ந்துள்ளது. அப்படி சாயும்போது அருகில் இருந்த மின்கம்பியையும் சேர்த்து இழுத்துள்ளது. அதேநேரத்தில் சரியாக அங்கு வந்த யானைக்குட்டி ஒன்றின் மீது அந்த மின்சாரக் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி குட்டி உயிரிழந்துள்ளது.
யானைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராமத்தினர், அவற்றால் மேற்கொண்டு தங்களுக்கு எதுவும் ஆபத்து வராமல் இருக்க சத்தம் எழுப்பி அவற்றை விரட்டி விட்டு, உள்ளூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஜூன் 16-ஆம் தேதியிலிருந்து அந்தப்பகுதியில் யானைகள் பலியாவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.