கூகுள் பே பணப்பரிமாற்றம் செய்யும் மூன்றாம் தரப்பு செயலியே என்று இந்திய ரிசர்வ் வங்கி தில்லி உயர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கூகுள் பே செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ஆர்பிஐ-யின் அனுமதி பெறவில்லை என்றும், அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்பிஐ தரப்பில், கூகுள் பே, எந்தப் பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை, மாறாக, இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலியே என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூகுள் பே தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், தங்களது செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே பணப்பரிமாற்றம் செய்ய தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும், அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும், அதனாலேயே என்பிசிஐ வெளியிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டண அமைப்பு பணப்பரிமாற்றாளர்கள் பட்டியலில் கூகுள் பே இடம்பெறவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.