பிகாரில் திருமணமான மறுநாளே மணமகன் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவத்துடன், திருமணத்தில் கலந்துகொண்ட 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஹரியாணா மாநிலம் குர்கானில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் 15 ஆம் தேதி திருமணத்திற்காக அவர் குர்கானில் இருந்து தனி வாகனத்தில் திருமணம் நடக்கும் நவுபத்பூர் பகுதிக்கு வந்தார்.
தொடர்ந்து திருமணமான மறுநாள் மணமகன் உடல்நிலை சரியில்லாத நிலையில் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை பாட்னாவில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், மருத்துவமனை வாயிலை அடையும்போது அவர் உயிர் பிரிந்துவிட்டது. பின்னர் அவருக்கு கரோனா பரிசோதனை எதுவும் செய்யப்படாமலேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
திருமணமான மறுநாளே மணமகன் இறந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண சடங்குகள் செய்யும்போதே மணமகன் உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டதாக திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை தகவலறிந்து கிராமத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியது. மேலும், திருமணம் மற்றும் மணமகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் முதலில் 125 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 15 பேருக்கு கரோனா இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், 81 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தற்போது வரை மொத்தமாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி டாக்டர் ராமானுஜம் தெரிவித்தார்.