புது தில்லி: தில்லி எல்.என்.ஜே.பி கரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு விடியோ கால் வசதியை வியாழனன்று முதல்வர் கேஜரிவால் துவங்கி வைத்தார்.
இந்த சேவையைத் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
தில்லியில் கடந்த 100 நாட்களுக்கு முன்னதாக கரோனா நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் முதலாவது மருத்துவமனை என்று அறிவிக்கபட்டது இந்த எல்.என்.ஜே.பி (லோக் நாயக் ஜெய் பிரகாஷ்) மருத்துவமனைதான். அளவில் பெரியதாக இந்த மருத்துவமனை 2,000 படுக்கைகளுடன் காணப்படுகிறது. இங்கே நிறைய நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது இங்கேதான். தற்போது அதையே நிறைய மருத்துவமனைகள் பின்பற்றுகின்றன.
இங்கே சிகிச்சை பெறும் கர்ப்பிணி நோயாளிகள் பிரசவத்திற்கும் இங்கே உரிய வசதிகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் இங்கே 114 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த விடியோ கால் வசதியின் மூலம் நோயாளிகள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.