கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பினராயி விஜயன் தெரிவித்ததாவது:
"கேரளத்தில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 84 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 33 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். கேரளத்திலேயே 6 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,726 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 1,761 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.
பல்வேறு மருத்துவமனைகளில் தனிமையில் இருக்கும் 2,349 பேர் உள்பட மொத்தம் 1,59,616 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 113 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன."
கேரளத்தில் சர்வதேச விமான சேவை தொடங்கிய மே 7-ஆம் தேதி முதல் இதுவரை 98,202 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.