முப்பது வயதில் ஆண் என தெரிந்து கொண்ட பெண்; அதுவும் புற்றுநோயால் 

புற்றுநோய் பாதித்திருப்பதே ஒரு அதிர்ச்சி என்றால், 30 வயது பெண்ணுக்கு, விதைப் பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பதன் மூலம் அவர் ஆண் என்பதும் உறுதியாகி கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
முப்பது வயதில் ஆண் என தெரிந்து கொண்ட பெண்
முப்பது வயதில் ஆண் என தெரிந்து கொண்ட பெண்


கொல்கத்தா: புற்றுநோய் பாதித்திருப்பதே ஒரு அதிர்ச்சி என்றால், 30 வயது பெண்ணுக்கு, விதைப் பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பதன் மூலம் அவர் ஆண் என்பதும் உறுதியாகி கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணுடன் திருமணமும் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர் 30 ஆண்டு காலம் தனது இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டார். திடிரென அடிவயிறு வலிக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் நடத்திய மருத்துவர்கள் அனுபம் தத்தா மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சமன்தாஸ், அவர் உண்மையில் பெண் அல்ல என்றும், பிறப்பால் அவர் ஆண் என்றும் உறுதிபடுத்தினர்.

அவரைப் பார்க்க பெண் போலவே இருக்கிறார், குரலும் பெண்ணின் குரல்தான், உடல் வாகும். ஆனால் அவருக்கு கருப்பையோ, சினைப்பையோ அமைந்திருக்கவில்லை.  அவருக்கு மாத விலக்கும் ஏற்படவில்லை என்கிறார் டாக்டர் தத்தா.

இது அரிதிலும் அரிதான  இந்த நோய், 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இவ்வாறு ஏற்படும். இவருக்கு ஆண்களைப் போலவே எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உள்ளன. பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்கள் தான் இருக்கும்.

அடிவயிறு பிரச்னைக்குக் காரணம் என பரிசோதித்த போது அவருக்கு, ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை இருந்ததும், அதில் புற்றுநோய் பாதிப்பு (டெஸ்டிகுலர் கேன்சர்) ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர் தத்தா தெரிவித்துள்ளார்.

அவரது உடலில் இருக்கும் விதைப்பை வளர்ச்சி அடையாமல் இருந்தது. அவரது உடலில் பெண்களுக்கான ஹார்மோன்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதால், அவர் பார்வையில் பெண்ணாக தென்பட்டுள்ளார் என்றும் மருத்துவர் கூறுகிறார்.

அவர் ஒரு பெண்ணல்ல என்று அறிந்த போது அவர் எவ்வாறு உணர்ந்தார் என்று மருத்துவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் பெண்ணாகவே வளர்ந்துள்ளார். ஒருவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். அவருக்கும், அவரது கணவருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறோம். வாழ்க்கையின் மீதி காலத்தையும் அவர்கள் இணைந்தே வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்கிறார்கள்.

இந்த பெண்ணின் தாய் வழி சித்திகளுக்கும் இதுபோன்ற பிரச்னை இருந்ததும், இவரது 28 வயது சகோதரியை பரிசோதனை செய்ததில், அவருக்கும் இதே மரபணுக் கோளாறு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com