2005 ஆண்டு சுனாமிப் பேரழிவின் போது மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவப் படையினரிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்தும், இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தது குறித்தும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையான விமரிசனங்களை முன் வைத்து வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சீனாவிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிதியுதவி பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில்,
"2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக் கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது. இதில் என்ன தவறு?"
"2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது!
சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?" என்று பதில் அளித்துள்ளார்.