ஏசி ரயில் பெட்டிகளில் வெளியிலிருந்து புதிய காற்றை அதிகம் உள்ளே செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
வழக்கமான ஏசி ரயில் பெட்டிகளில் ஒரு மணி நேரத்துக்கு 6 முதல் 8 முறை காற்று உள்ளே செலுத்தப்படுகிறது. இதில், 80 சதவீத காற்று ஏற்கெனவே ரயில் பெட்டிக்குள் பரவியிருந்த காற்றாகும். வெளியிலிருந்து எடுக்கப்படும் புதிய காற்று 20 சதவீதமாகும்.
இந்நிலையில், ஒரு மணிநேரத்துக்கு 16 முதல் 18 முறை காற்று உள்செலுத்தப்படும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது, மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டா்களில் பின்பற்றபடும் முறையாகும். இந்த மாற்றம், முதல்கட்டமாக 15 ராஜதானி ரயில்களில் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 10 முதல் 15 சதவீதம் எரிசக்தி தேவை அதிகரிக்கும். எனினும், பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படவில்லை. அதேசமயம், தில்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு ராஜதானி ரயில்கள், சிறப்பு பயணிகள் ரயில்கள், புலம்பெயா் தொழிலாளா்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், ராஜதானி ரயில்கள், முற்றிலும் ஏசி வசதி கொண்ட ரயில்களாகும்.