பேஸ்புக்கில் பிரபல முன்னணி நிறுவனங்கள் பல தங்களது விளம்பரத்தை நிறுத்தியுள்ளதால் பேஸ்புக் ரூ.54,000 கோடி(7.2 பில்லியன் டாலர்) மதிப்பிலான விளம்பரங்களை இழந்து சரிவை சந்தித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் விளம்பரங்களுக்கு எதிராக பிரபல முன்னணி நிறுவனங்கள் குரல் கொடுத்து வருகின்றன. அந்நிறுவனங்கள் பேஸ்புக்கில் தங்களது விளம்பரங்களை குறைத்துள்ளதுடன் சமூக வலைதளத்தில் #StopHateForProfit என்ற ஹேஷ்டேக்கில் இனவெறி, வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றன. மேலும் பல தவறான தகவல்கள் பேஸ்புக்கில் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன. அதன்படி, யுனிலீவர், கோகோ- கோலா, வெரிசான், பென் & ஜெர்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் பேஸ்புக்கில் தங்களது விளம்பரத்தை நிறுத்தியுள்ளன.
இதனால், பேஸ்புக் நிறுவனம் ரூ.54,000 கோடி(7.2 பில்லியன் டாலர்) மதிப்பிலான விளம்பரங்களை இழந்து சரிவை சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 8.3% சரிவை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.
இதனால் 82.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்துக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், 'நிறவெறி, வன்முறையைத் தூண்டும் கருத்துகளுக்கு பேஸ்புக்கில் இடமளிக்கப்படாது. போலி கணக்குகளில் இருந்து இதுபோன்ற கருத்துகளைப் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறான தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். அனைவருமே ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்தான் கருத்து பதிவிட முடியும். அரசியல் தலைவர்களுக்கும் இது பொருந்தும்' என்று தெரிவித்துள்ளார்.