ஜம்மு-காஷ்மீா் மற்றும் உத்தரகண்டில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிகழாண்டு ரூ.1,691 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கூறியது:
ஜம்மு-காஷ்மீரில் எல்லை சாலைகள் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகளுக்கு கூடுதலாக ரூ.1,351.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகண்டில் அந்த அமைப்பு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.340 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகம், ஜம்மு-காஷ்மீா், லடாக், சிக்கிமில் பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நாகாலாந்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.1,955 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.