ஷிவ்புரி: மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து காணமல் போன மூன்று சிறுமிகள் குட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சதன்வாடா காவல்நிலைய எல்லைக்குள் உள்ளது ஹதிகர் மலைவாழ் கிராமம். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து மூன்று சிறுமிகள் ஞாயிறு மாலை ப்ளாக்பெர்ரி பழங்கள் பறிக்கப் போவதாகச் சொல்லி விட்டு, வீட்டை விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை.
எனவே பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் திங்கள் காலை தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அருகில் இருந்த குட்டையில் உள்ளூர் ஆட்களைக் கொண்டு தேடிய போது, மூன்று சிறுமிகளின் சடலங்கள் கிடைத்தது.
இதுதொடர்பாக காவல்நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது காணமல் போனவர்களில் இருவர் சகோதரிகள். அவர்கள் வீடு திரும்பும்போது எதிர்பாராமல் குட்டையில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.