இந்திய, சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) 3-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"இந்தியா, சீனா ராணுவத் தளபதிகள் நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கடந்த 2 முறை சீனாவின் மோல்டோவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முறை இந்தியாவில் சுஷூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எல்லையில் மோதல் போக்கைத் தவிர்க்க இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வது பிரதான நோக்கமாக இருக்கும்.
பதற்றமான சூழலைத் தணிப்பதற்காக, விவாதத்துக்குரிய அனைத்துப் பகுதிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது."
முன்னதாக, இருநாட்டு ராணுவத் தளபதிகள் நிலையில் ஜூன் 6 மற்றும் ஜூன் 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 22-ஆம் தேதி சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.