மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய இன்றைய அறிவிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 5,257 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 181 பேர் பலியாகியுள்ளனர். இதில் கடந்த 48 மணி நேரத்தில் 78 பேரும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் 103 பேரும் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,69,883 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 4.48 சதவிகிதமாக உள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 2,385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 88,960 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 52.37 சதவிகிதமாக உள்ளது.
இதுவரை மொத்தம் 9,43,485 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், 5,74,093 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 37,758 பேர் கரோனா மையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பில் உள்ளனர்.