ஹைதராபாத்: தெலங்கானாவின் உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
67 வயதான முகமது அலி, தெலங்கானாவில் கரோனா வைரஸ் பாதிக்குள்ளான முதல் அமைச்சரவையின் அமைச்சர் ஆவார். ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஞாயிறன்று இரவு ஜூப்பிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில், அமைச்சரின் பாதுகாப்பு ஊழியர்கள் ஐந்து பேருக்கு கரேனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஜூன் 28-ம் தேதி நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 983 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளன. இதுவரை அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 14,149 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மேலும் நான்கு பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 247-ஐ எட்டியுள்ளது.