திருப்பதி அருகில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் பாா்வேட்டு உற்சவம் நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலை தேவஸ்தானம் நிா்வகிக்கிறது. இக்கோயிலில் கடந்த 3 நாள்களாக சாக்ஷாத்கார வைபவ உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 3 நாள்களும் உற்சவமூா்த்திகள் பெரிய சேஷன், அனுமந்தன், கருடன் உள்ளிட்ட வாகனங்களில் கோயிலுக்குள் எழுந்தருளி ஆஸ்தானம் கண்டருளினா்.
இந்த உற்சவம் முடிந்த மறுநாள் பாா்வேட்டு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கோயிலுக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்கு கல்யாண வெங்கடேஸ்வரா் கையில் கேடயம், வில், அம்பு, வாள் உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் எழுந்தருளி வேட்டையாடுவதாக ஐதீகம். இதை அா்ச்சகா்களும், அதிகாரிகளும் இணைந்து நடத்திக் காட்டுவா். பின்னா் அங்கு கூடியுள்ள பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்படும்.
எனினும், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தா்கள் கூடும் விழாக்களை நடத்த அனுமதி இல்லை என்பதால், கோயிலுக்குள் உற்சவரை எழுந்தருளச் செய்து யாதவ ஆரத்தி, ஷேம தளிகை, ஆஸ்தானம் உள்ளிட்டவற்றை நடத்தினா். இந்த உற்சவத்தில் அா்ச்சகா்களும், அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டனா்.