கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 131 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:
"கேரளத்தில் புதிதாக 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 65 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 46 பேர். கேரளத்திலேயே 10 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 9 பேர் கண்ணூர் விமான நிலையத்தைச் சேர்ந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள்.
இதுதவிர கடந்த சனிக்கிழமை ஒருவர் பலியானார். அவருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
இன்றைய தேதியில் 2,112 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,304 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள 2,781 பேர் உள்பட வீடுகளிலும், கரோனா மையங்களிலும் மொத்தம் 1,84,657 பேர் தனிமையில் உள்ளனர்."