ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜூன் மாதத்தில் மட்டும் 48 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரதேச டிஜிபி தில்பாக் சிங் தெரவித்துள்ளார்.
அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜம்முவின் பூன்ச் மாவட்டத்தில் செவ்வாயன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 128 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 48 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 128 பேரில் 70 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பையும், தலா 20 பேர் லஸ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முஹம்மத் அமைப்பையும் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் இதர சிறிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி மையங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இந்தியாவினுள் ஊடுருவும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
கடந்த காலத்திலும் அவர்களின் இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களிலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.
ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களில் சேர்வது தொடர்ந்து குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.