புது தில்லி: இந்திய மண்ணை விட்டு சீனப்படைகள் எப்போது நீங்கும்? என்று பிரதமருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று விடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல் அதில் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் உள்ள ஏழைகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் பெறும் ஊழியர்கள் வாழ்வில் கரோனா மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே ஆறு மாதங்களுக்கு என்றாலும் கூட, அவர்களுக்கு நிவாரணம் தரக்கூடிய காங்கிரஸ் பரிந்துரைத்த ‘நியாய்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதன்வழியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.7,500 தொகையினை செலுத்த வேண்டும்.
நமது இந்தியத் திருநாட்டின் நிலப்பரப்பில் நான்கு இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளதை அனைவரும் அறிவார்கள். எனவே இந்திய மண்ணை விட்டு சீனப்படைகள் எப்போது நீங்கும் என்பது குறித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.