ஆந்திர மாநிலம் நெல்லூரில் உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரைக் கடுமையாகத் தாக்கிய துணை மேலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெண் ஊழியர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அந்த விடியோவில் இருப்பவர் பாஸ்கர் என்றும், அவர் ஆந்திர சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் உணவகத்தில் துணை மேலாளராகப் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. தாக்குதலுக்கு உள்ளான பெண், அதே உணவகத்தின் மூத்த உதவியாளராகப் பணிபுரிகிறார்.
இந்த நிலையில் பெண் ஊழியரைத் தாக்கிய பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி துணைக் காவல் ஆய்வாளர் வேணுகோபால் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
"ஜூன் 27-ஆம் தேதி இருவருகிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தனது கட்டுப்பாட்டை இழந்த பாஸ்கர், அருகிலிருந்த நாற்காலியின் கைப்பிடியால் அந்தப் பெண் ஊழியரைத் தாக்கினார். சம்பவம் நடந்த அதே தினத்தன்று பிற்பகல் 2 மணிக்கு நெல்லூர் 4 டவுன் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். காவல் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்."