புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றத்தை தணிப்பதற்காக இந்திய-சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 3-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளை இறுதி செய்வது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
இந்திய-சீன ராணுவ துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 3-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியப் பகுதியில் உள்ள சுஷுல் செக்டாரில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
முதல் இரு சுற்றுப் பேச்சுவார்த்தை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனப் பகுதியில் உள்ள மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்றது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது கிழக்கு லடாக்கில் பதற்றம் நிலவும் பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெறுவதென பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது.
தற்போது 3-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது, கடந்த 6-ஆம் தேதி முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியத் தரப்புக்கு துணைத் தலைமைத் தளபதி ஹரிந்தர் சிங் தலைமை தாங்கும் நிலையில், சீன தரப்புக்கு திபெத் பிரிவு ராணுவ துணைத் தலைமைத் தளபதி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய}சீன துருப்புக்களிடையே கடந்த 15}ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அந்நாடு அதை உறுதிப்படுத்தவில்லை.
அந்த மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது. தற்போது அதைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.