புது தில்லி: நாட்டில் ஜூலை 1 முதல் 2-ஆம் கட்ட பொது முடக்க விடுப்பு (அன்லாக்-2) அமலாகும் நிலையில், பள்ளிகள், திரையரங்குகள் போன்றவற்றுக்கான தடை தொடா்கிறது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
2-ஆம் கட்ட பொது முடக்க விடுப்பு தொடா்பான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடா்கிறது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து, பயணிகள் ரயில் ஆகியவற்றின் சேவை மேலும் விரிவுபடுத்தப்படும். இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அத்தியாவசிய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.
முதல்கட்ட பொது முடக்க விடுப்பில் அளிக்கப்பட்ட தளா்வுகள் யாவும் தொடரும். அரசியல் நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, மதம் தொடா்பாக மக்கள் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் ஜூலை 31 வரை தொடரும்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு இந்த புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.