இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 59.07% ஆக முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தி:
"கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 13,099 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 3,34,821 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம் மொத்தம் 2,15,125 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர்.
இன்றைய தேதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களுக்கிடையிலான எண்ணிக்கை வித்தியாசம் 1,19,696 ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து, குணமடைவோர் விகிதம் 59.07% ஆக முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 1,049 ஆய்வகங்கள் உள்ளன. அரசு ஆய்வகங்கள் 761, தனியார் ஆய்வகங்கள் 288.
கரோனா பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,19,292 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 86,08,654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன."