உத்தரப்பிரதேச அரசு, காவல்துறையை அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினத் தலைவர் ஷானாவாஸ் ஆலம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், பாஜக அரசு எங்கள் குரலை அடக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக காவல்துறையை அடக்குமுறை கருவியாக பயன்படுத்துகிறது. நேற்று நள்ளிரவில் எங்களது கட்சி நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது.
உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கை, அடக்குமுறை மட்டுமின்றி ஜனநாயகத்துக்கு விரோதமானது. முன்னதாக உ.பி. மாநில காங்கிரஸ் தலைவரை பொய் குற்றச்சாட்டுடன் காவல்துறை கைது செய்து 4 வாரங்கள் சிறையில் வைத்தது. இதுபோன்ற காவல்துறை அடக்குமுறைகளுக்கும், பொய் வழக்குகளுக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் பயப்படமாட்டார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
2019 டிசம்பர் 19 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ் சிறுபான்மையினத் தலைவர் ஷானாவாஸ் ஆலம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். போராட்டம் நடைபெற்றதில் இருந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது போதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் லக்னோ துணை போலீஸ் கமிஷனர் தினேஷ் சிங் தெரிவித்துள்ளார்.