ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சோஹர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிஆர்பிஎஃப், ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவினர் ஆகியோருடன் அனந்த்நாக் காவல் துறையினர் அந்தப் பகுதிக்கு திங்கள்கிழமை காலை விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினர் நெருங்கியபோது, அதையறிந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெகுநேரம் நீடித்த இந்த மோதலில், பயங்கரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 2 பேர் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
மற்றொருவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர். இவரது பெயர் மசூத் அகமது. தோடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதால் தலைமறைவானார். பின்னர், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, காஷ்மீரில் இருந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். தோடா மாவட்டத்தைச் சேர்ந்த கடைசி பயங்கரவாதியும் கொல்லப்பட்டதால், ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத மாவட்டமாக தோடா மாவட்டம் உருவாகிவிட்டது என்றார் அந்த போலீஸ் அதிகாரி.