புது தில்லி: ‘பெட்ரோல், டீசல் மூலமாக லாபமடைவதை மத்திய அரசு நிறுத்தவேண்டும். அவற்றின் விலையும், அவை மீது விதிக்கப்பட்டுள்ள சுங்க வரியும் உடனடியாக குறைக்கப்படவேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக ‘எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக உரக்கப் பேசுவோம்’ பிரசாரத்தில் அவா் பேசி திங்கள்கிழமை வெளியிட்ட காணொலியில், ‘கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் 22 முறை பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது. இது ஏழைகளுக்கு மிகப்பெரிய இடியாகும். பெட்ரோல், டீசல் விற்பனை மூலமாக லாபமடைவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அவற்றின் விலையையும், அவை மீதான சுங்க வரியையும் மத்திய அரசு உடனடியாக குறைக்கவேண்டும். இதுபற்றி நாம் அனைவரும் ஒருமித்த குரலில் பேசினால்தான், மத்திய அரசுக்கு புரியும். அதன் பிறகே எரிபொருள் மீதான விலை குறைக்கப்படும்’ என்று ராகுல் காந்தி தெரிவித்தாா்.