இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூர் வந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி சுற்றுலாப் பயணி ஒருவர் ஜெய்ப்பூர் வந்தார். விமான நிலையக் கண்காணிப்பில் அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட முதல் ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை எடுக்கப்பட்ட இரண்டாவது மாதிரி பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இரண்டு வெவ்வேறு முடிவுகள் வந்ததால், அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா தெரிவித்தார்.
இந்நிலையில், இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூர் வந்த சுற்றுலாப் பயணி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், "இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது" என்றார்.
இதனிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மேலும், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.