உத்தரப்பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ், ஐஎம்எஃப்எல் ரக மது வகைகள் இனி அலுமினிய கேன்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே அலுமினிய கேன்களில் மது விற்கும் முதல் மாநிலமாக உள்ளது.
அலுமினிய கேன்கள் பேக்கேஜிங் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று மாநில கலால் துறையின் முதன்மைச் செயலர் சஞ்சய் பூஸ்ரெட்டி தெரிவித்தார். இதனால் மதுவில் கலப்படம் செய்யப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடி பாட்டில்களை விட அலுமினிய கேன்கள் மலிவாக கிடைக்கின்றன. பாட்டில்கள் உடைவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதன் மூலமும், பேக்கேஜிங் செலவைக் குறைப்பதன் மூலமும் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் பயனடைகின்றன.
புதிய கலால் கொள்கையின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை அட்டைப் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கான திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.