தில்லி கலவரத்தின்போது போலீஸாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக் (33) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே தில்லியில் ஏற்பட்ட வன்முறையின்போது, மர்ம நபர் போலீஸை துப்பாக்கி காட்டி மிரட்டியப் புகைப்படங்கள், விடியோக்கள் பிப். 24ஆம் தேதி வெளியானது. அதில், போலீஸார் முன்பு அந்த நபர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டது பதிவாகியுள்ளது. பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
போலீஸாரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய நபரின் பெயர் ஷாரூக் (33) என்பது தெரியவந்தது. ஆனால், ஷாரூக் மற்றும் அவரது உறவினரும், ஆம்ஆத்மி கவுன்சிலருமான தாஹிர் ஹுசைன் உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகினர். மேலும் தில்லி போலீஸார் ஷாரூக் வீட்டில் நடத்திய சோதனையில், பலதரப்பட்ட வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், தில்லி போலீஸாரால் ஷாருக் உத்தரப்பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.