கரோனா பாதித்தவரின் பிள்ளை படிக்கும் பள்ளி உட்பட நொய்டாவில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை
நொய்டா: இந்தியாவில் நேற்று தில்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதில், கரோனா பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட தில்லியைச் சேர்ந்தவரின் பிள்ளை படிக்கும் பள்ளி உட்பட நொய்டாவில் இரண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பள்ளிகளில், ஒரு பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தைக்குத்தான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளிக்கு மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், தவிர்க்க முடியாத காரணத்தால் முக்கியத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
மற்றொரு பள்ளியும் முன்னெச்சரிக்கையாக மார்ச் 9ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு பள்ளிகளையும் சுத்தப்படுத்தி, வைரஸ்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நொய்டாவின் மருத்துவத்துறை உயர் அதிகாரி தலைமையிலான சுகாதாரக் குழுவினர், பள்ளிகளை இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபரின் குடும்பத்தினர் சிலருக்கும் கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் அவர்கள் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவருடன் சமீபத்தில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தங்களது வீட்டிலேயே தனியாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் கணக்குப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தில்லியின் மயூர் விஹார் பகுதியில் வசித்து வரும் அவரும் சிகிச்சைக்காக தற்போது சஃப்தார்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.