கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளத்திலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார் .
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ரஹீமுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்வர் பினராயி விஜயனையும், இளைஞர் அணிச் செயலாளர் ரஹீமையும் வீடு புகுந்து வெட்டுவோம் என்று எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தக் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தினால் கேரள மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.