கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளின் பாதுகாப்பிற்காக காப்பகங்களை ஏற்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இன்றும் நாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோர் சாதி, மத வெறியினால் கொல்லப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், கேரள அரசு கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, கலப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு என தனிப் பாதுகாப்பு இல்லங்களை ஏற்படுத்த முன்வந்துள்ளது. 'பாதுகாப்பு இல்லங்கள்' என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் காப்பகங்களில் திருமணம் ஆன தம்பதிகள், ஒரு வருடம் அல்லது தாங்கள் பாதுகாப்பாக உணரும் வரை தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதார மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், 'இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும். கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதனை செயல்படுத்த அரசு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்க்கவுள்ளது.
முன்னதாக, கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப்பிரிவினராக இருந்து, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் இருக்கும் பட்சத்தில் சுய வேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக ரூ.30,000 சமூகநீதித்துறை வழங்கி வருகிறது.
அதேபோன்று தம்பதியில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. கலப்புத் திருமணம் செய்வோர் அரசுப் பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில் பணியிட மாற்ற விவகாரத்தில் அவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு விரைவில் காப்பகங்கள் கொண்டுவரப்படும்' என்று கூறினார்.