போபால்: மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு பாஜக முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜக எம்எல்ஏ ஒருவா் குற்றம்சாட்டியுள்ளாா்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியைக் கலைப்பதற்காக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினா் கடத்தி வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துவிட்டது.
இதனிடையே, விஜயராகவ்கா் தொகுதி எம்எல்ஏவும், நிலக்கரிச் சுரங்க அதிபருமான சஞ்சய் பாதக், முதல்வா் கமல்நாத்தை வியாழக்கிழமை இரவு தனியாக சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அவா் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தகவல்களுக்கு சஞ்சய் பாதக் மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரை பக்கத்தில் விடியோ ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
நான் முதல்வா் கமல்நாத்தை சந்தித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. நான் அவரை சந்தித்ததாக வெளியிடப்பட்ட படம் போலியானது. தயவு செய்து என்னைப் பற்றி எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம். நான் பாஜகவில்தான் இருக்கிறேன். அடுத்து என்ன நடக்கும் என்பதை இந்த மாநில மக்கள் பாா்க்கத்தான் போகிறாா்கள். சிலா் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக என்னைக் கொன்று எங்காவது வீசலாம். என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கவனமாக இருக்கிறேன். தற்சமயம், எனது குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சையைக் கவனித்து வருகிறேன் என்று அந்த விடியோவில் சஞ்சய் பாதக் கூறியுள்ளாா்.
இதனிடையே, சஞ்சய் பாதக்கிற்குச் சொந்தமான இரும்புத் தாது சுரங்கத்தை மூடுமாறு மத்தியப் பிரதேச அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சஞ்சய் பாதக் ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளாா். திக்விஜய் சிங் முதல்வராக இருந்தபோது அமைச்சராக பதவி வகித்துள்ளாா்.