ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவலை நீக்கி மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதன்மைச் செயலர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்புச் சட்டம் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான, மூன்று முறை முதல்வராக இருந்துள்ள ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா மற்றும் பிடிபி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி ஆகியோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவலை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம், 1978 இன் பிரிவு 19 (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, 15-09-2019 தேதியிட்டு ஃபரூக் அப்துல்லாவுக்கு பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.