புது தில்லி: தலைநகர் தில்லியில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
ஜி.டி கர்னல் சாலையில் மதியம் 12 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு ரசாயன தொழிற்சாலைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைத் தலைவர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜஹகிர்புரி மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள தொழிற்சாலைகள். மேலும், இந்த தொழிற்சாலைகள் உள்ள கிடங்கில் சிலிண்டர்கள் மற்றும் பெரிய அளவில் ரசாயனப் பொருட்கள் சேமிப்பு வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாக பரவியது. இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாடி தொழிற்சாலைகளின், தரை தளத்திலிருந்து தீ விபத்து ஏற்பட்டதால், தொழிற்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பெருமளவு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.