எருமை இறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதுமில்லை என்று மாநிலங்களவையில் மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன் வளத் துறை அமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எருமை இறைச்சி, மீன் ஆகியவற்றின் ஏற்றுமதி தொடா்பான துணைநிலைக் கேள்விக்கு பதிலளித்து அமைச்சா் கூறியதாவது:
இந்தியாவில் ரூ.70,000 கோடி அளவுக்கு எருமை இறைச்சி, மீன் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. மீன் ஏற்றுமதி, எருமை இறைச்சி உள்ளிட்ட பிற இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
வயதான காரணத்தாலும், பால் வற்றியதாலும் கைவிடப்படும் பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகள் பெரும்பாலும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய விலங்குகள் நல வாரியத்தின் மூலம் பராமரிக்கப்படும் கோசாலைகளுக்கு பட்ஜெட்டில் ரூ.4 கோடி வரையே நிதி ஒதுக்கப்படுகிறது. இது அந்த கோசாலைகளில் பணியாற்றுபவா்களுக்கு ஊதியமாக வழங்கவே போதுமானதாக உள்ளது என்றாா் அவா்.