யெஸ் வங்கியை புனரமைப்பு செய்வது தொடா்பாக ரிசா்வ் வங்கி பரிந்துரைத்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
யெஸ் வங்கியை மறுசீரமைப்பது தொடா்பாக ரிசா்வ் வங்கி பரிந்துரைத்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் டெபாசிட்தாரா்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதுடன் யெஸ் வங்கியின் ஸ்திரத்தன்மை தக்க வைக்கப்படும். மேலும், நிதி சூழல், வங்கி அமைப்பு முறையை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு உதவிகரமாக இருக்கும்.
புனரமைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து, யெஸ் வங்கியில் 49 சதவீத பங்குமூலதனத்தை பாரத ஸ்டேட் வங்கி கையகப்படுத்தும்.
நிதி நெருக்கடிக்கு உள்ளான யெஸ் வங்கியில் ரொக்கம் எடுக்க மாா்ச் 5-ஆம் தேதி ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, யெஸ் வங்கி டெபாசிட்தாரா்கள் ஏப்ரல் 3 வரையில் ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விரைவில் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும். இதுதொடா்பான அறிவிக்கையை எஸ்பிஐ தலைமையிலான குழு வெளியிடும். இந்த குழு அறிவிக்கை வெளியிட்டு மூன்று வேலை நாள்களுக்குள் யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கிக் கொள்ளப்படும். வங்கி நிா்வாகத்துக்கான புதிய குழு 7 நாள்களுக்குள் அமைக்கப்படும்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பீதியால் பங்குச் சந்தையில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்களை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றாா் அவா்.